March 2019





ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA 
 
பொருளாதார உடண்படிக்கைகளில் பெண்களுக்கான உரிமைகள்.

பெண்கள் பொருளாதாரத்தில் ஈடுபடலாம் என்பதற்கான ஆதாரங்கள்


பெண்கள் சொத்துக்களை சேர்ப்பதற்கும், அவற்றை செலவு செய்வதற்கும், அதை வியாபாரத்தில் உபயோகப்படுத்தவும் அவர்களுக்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. தனது சொத்திலிருந்து நன்கொடைகள், தான தர்மங்கள் போன்றவற்றையும் அவள் வழங்கலாம். அவ்வாறே தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை அனந்தரக்காரர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு வசிய்யத்தின் மூலமும் வழங்கிடலாம்.

இஸ்ஸாலம் மனித உரிமைகள் எனும் விடயத்தில் ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் என உரிமைகளைப் பகிர்ந்தளிக்கவில்லை. இரு தரப்பினருக்கும் சரிசமமான உரிமைகளைத் தான் வழங்கியுள்ளது, இது விடயத்தில் முஸ்லிமான பெண்களுக்கு வேறாகவும், முஸ்லிம் இல்லாத பெண்களுக்கு வேறாகவும் என்றும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. பெண்கள் எனும் பொதுவான வட்டத்தினுள் இரு தரப்பினரையும் இணைக்கும் வகையில் அவர்களுக்கான உரிமைகளை இஸ்லாம் பூரணமாகவே வழங்கியுள்ளது.

பெண்கள் சொத்துக்களை வைத்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள்

அல்குர்ஆனிய ஆதாரங்கள்

01. அல்லாஹ் கூறுகிறான், “பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!” (அல்குர்ஆன் 04:04). இங்கு அல்லாஹ் பெண்களுக்கு வழங்க வேண்டிய மஹ்ரைக் குறிப்பிடுகிறான். இதில் குறிப்பிட வேண்டியது யாதெனில் அவர்களாக முன்வந்து கணவனுக்கு எதையேனும் நன்கொடையாக அளித்தால் அதனை கணவன் பயன்படுத்தலாம். இது பெண்கள் நன்கொடைகளை அளிக்கலாம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.

02. அல்லாஹ் கூறுகிறான், “அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் பொறுப்புணர்வையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்!” (அல்குர்ஆன 04:06). இவ்வசனத்தில் பெண்கள் திருமண வயதை அடைந்து அவர்களுக்கு சொத்தை நிர்வகிக்கும் ஆற்றலும் இருந்தால் திருமணம் முடித்தாலோ, முடிக்காவிட்டாலோ குறித்த சொத்தை அவர்களிடம் கொடுத்துவிடுமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.

03. அல்லாஹ் கூறுகிறான், “உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” (அல்குர்ஆன் 33:33). இவ்வசனத்தில் பெண்களே ஸகாத் கொடுக்க வேண்டுமெனவும், பெண்ணின் சொத்தை வைத்து கணவனோ, அல்லது குறித்த பெண்ணின் பொறுப்பாளரோ ஸகாத் கொடுக்கக் கூடாது எனவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

04. அல்லாஹ் கூறுகிறான், “முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.” (அல்குர்ஆன் 33:35). இவ்வசனத்தில் தர்மம் செய்யும் பெண்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டு அவர்களுக்கும் அவனின் மன்னிப்பும், மகத்தான கூலியும் இருப்பதாகக் குறிப்பிடுகிறான்.

ஹதீஸ் ஆதாரங்கள்

01. நபி r அவர்கள் கூறினார்கள், “பெண்களே, நீங்கள் அணியும் ஆபரணமாக இருப்பினும் அவற்றையும் தர்மம் செய்யுங்கள்”.(அறிவிப்பவர்: அப்துலாஹ் இப்னு மஸ்ஊதின் t மனைவி ஸைனப் y, ஆதாரம்: முஸ்லிம் 1000). இங்கு நபியவர்கள் உங்கள் கணவனின் அனுமதிக்குப் பின்னர் எனும் வாசகத்தைப் பிரயோகிக்காததால் பெண் தனது விருப்பப்படி தனது சொத்தில் ஈடுபடலாம் என்பதைக் குறிக்கிறது.

02. மைமூனா பின்த்து ஹாரிஸ் y அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி r அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி r அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி r அவர்கள், நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி r அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி 2592). இங்கு நபியவர்களின் மனைவி தனது அடிமையை விடுதலை செய்வது பற்றி தனது கணவன் நபியவர்களிடம் கூட அனுமதி பெற்றிருக்கவில்லை. நபியவர்களும் இது குறித்து ஏன் அப்படி செய்தாய் எனக் கேட்கவுமில்லை.

தனது சொத்தை அனுபவிப்பதற்கான பூரண சுதந்திரம் பெண்களுக்கு உண்டா?

பொருளாதாரத்தில் பெண்கள் ஈடுபடலாம் என்பதற்கு இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் பெண்கள் பொருளியலில் ஈடுபடுவதற்கான பூரண சுதந்திரம் பெற்றவர்கள் என்பதை தெளிவாகவே விளக்குகின்றன. ஆயினும் பெண்கள் எப்போது தனது சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள்? அவர்களது சொத்தை பொருளாதாரத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் யாருடைய அனுமதியைப் பெற வேண்டும் என்பவற்றில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனை இரு வகையாகப் பிரித்து நோக்கலாம்.

முதலாவது: பெண்ணுக்கு அவளது சொத்தைக் கொடுக்கும் நேரமும், அதில் அவளுக்குரிய சுதந்திரமும்.

இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றன:

01. ஹன்பலி மத்ஹபினர்: ஒரு பெண் பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்து, குழந்தையைப் பெற்றடுக்கும் வரை அல்லது திருமணம் முடித்து, கணவனின் வீட்டில் ஒரு வருடம் இருக்கும் வரை அவளுக்கான சொத்தை அவளிடம் ஒப்படைக்க முடியாது என இவர்கள் கூறுகின்றனர். இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் முஃஹ்னி எனும் நூலில் (6/601) குறிப்பிடப்பட்டுள்ள ஓர் செய்தியை இதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஷுரைஹ் y அவர்கள் குறிப்பிடுகிறார்கள், “(அடிமைப்) பெண்ணுக்கு அவள் தனது கணவன் வீட்டில் ஒரு வருடம் இருக்கும் வரை அல்லது குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளது சொத்துக்கள் எதையும் அவளிடம் ஒப்படைக்கக்கூடாது என உமர் y அவர்கள் என்னிடம் உடன்படிக்கை செய்துள்ளார்கள்”. இதுவே அச்செய்தியாகும்.

02. மாலிக் மத்ஹபினர்: ஒரு பெண்ணின் சொத்துக்களுக்குப் பொறுப்பாக அவள் திருமணம் முடிக்கும் வரை அவளின் தந்தையே இருப்பார். அவள் தனக்கான கணவனை தேர்ந்தெடுக்கும் ஆற்றலைப் பெறுவது அவளிடம் சொத்துக்களை தைரியமாக கையாழ முடியும் எனும் தன்மையை உண்டுபன்னுகிறது என இவர்கள் கூறுகின்றனர். இச்செய்தி இப்னு ருஷ்த் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய பிதாயதுல் முஜ்தஹித் (2/280) எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. ஹனபீ மற்றும் ஷாபிஈ மத்ஹபினர்: ஒரு பெண் பருவ வயதை அடைந்து, தெளிவான புத்திசுயாதீனமாக இருந்தால் அவளுக்கு அவளின் சொத்துக்களை ஒப்படைத்திட முடியும். அவள் திருமணம் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவ்வாறே அவள் விரும்பியவாறு வியாபாரத்தில் ஈடுபடலாம். தனது சொத்துக்களில் தான தர்மங்களை கொடுத்திடலாம். கணவனுக்கு தேவையான உதவிகளை செய்திடலாம் எனக் கூறுகின்றனர். இதற்கு நாம் முன்னர் குறிப்பிட்ட ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதுவே ஏற்றமான கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இரண்டாவது: வியாபாரம் தவிர்ந்த ஏனையவற்றில் பெண்கள் தமது சொத்துக்களைப் பயன்படுத்தல்.

தாம் பெற்ற சொத்துக்களில் வியாபாரம் தவிர்ந்த நன்கொடைகள், தானதர்மங்கள், ஸகாத் போன்வற்றை வழங்கும் போது கணவனின் அனுமதியைப் பெற வேண்டுமா என்பதையே இத்தலைப்பு கூற விளைகிறது. இதில் அறிஞர்களுக்கு மத்தியில் இரு கருத்துக்கள் இருக்கின்றன.

01. மாலிக் மற்றும் ஹன்பலி (இரண்டாம் கருத்து) மத்ஹபினர்: மனைவி தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை கணவனின் அனுமதியின்றி தானதர்மம் செய்திடலாம். அதை விட கூடுதலாக செய்யும் போது கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். கணவன் விரும்பினால் கொடுக்குமாறு அனுமதி வழங்கலாம். அல்லது தடுத்திடலாம்.

02. ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி (முதலாம் கருத்து) மத்ஹபினர்: புத்திசுயாதீனமுள்ள பருவ வயதை அடைந்த எந்தப் பெண்ணும் தனது சொத்தில் விரும்பியவாறு தானதர்மம் செய்திடவும், வக்ப் செய்வதற்கும், வியாபாரம் செய்தல், அடகு வைத்தல், வஸிய்யத் செய்தல், இரவல் கொடுத்தல், கூலி கொடுத்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம். இவை அனைத்திற்கும் தந்தையினதோ, கணவனினதோ அனுமதி தேவையில்லை. எனக் கூறுகின்றனர். இதுவே ஏற்றமான கருத்தாக இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

எனவே பருவ வயதை அடைந்த, புத்தி சுயாதீனமுள்ள ஒரு பெண் பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடலாம் என்பதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. மனிதன் எனும் அடிப்படையில் ஆணோ, பெண்ணோ புத்தி சுயாதீனத்தை அடைந்தால் அவர்கள் தமது செயற்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமாக ஈடுபட ஆரம்பிக்கின்றனர். தொழில் புரிதல், வியாபாரத்தில் ஈடுபடல், குடும்பத்தை வழிநடாத்திச் செல்லல், சமூகப் பணிகளில் ஈடுபடல், தனது எதிர்காலத்தை திட்டமிடல் போன்ற அனைத்திலும் தனித்து செயற்பட ஆரம்பிக்கின்றனர். பெண்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள், இலகுவாக ஏமாற்றம் அடையும் குணம் கொண்டவர்கள் என சமூகம் அதிகமான உரிமைகளை பெண்களுக்கு தர மறுக்கிறது. இஸ்லாம் அவை அனைத்திற்கும் குறிப்பிட்ட வரையறை ஒன்றை வைத்து உரிமைகளை வழங்கியுள்ளது.

இஸ்லாம் வருவதற்கு முன்னர் கூட பல பெண்கள் தமது சொத்துக்களை வைத்து வியாபாரம் செய்துள்ளனர். கணவனுக்கு முடியாமல் போகும் போது குடும்பத்தை வழிநடாத்திச் சென்றிருக்கிறார்கள். இஸ்லாம் வந்த பின்னரும் தமது இப்பணிகளை தொடரந்தும் செய்திருக்கின்றனர். இதற்கு மிக முக்கிய உதாரணமாக நபியர்களின் மனைவி ஹதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைக் குறிப்பிடலாம்.




17- عَنْ أَنَسٍ يَقُوْلَ: كَانَ النَّبيُّ إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ: 'اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ'. صحيح البخاري رقم الحديث 142 وصحيح مسلم رقم الحديث 122- (375) واللفظ للبخاري 
.
(17) 'கழிப்பிடத்திற்குச் செல்லும்போது, 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் குபுஸி வல் கபாஇஸி' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்'.

'இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும்) ஆண், பெண் ஷைத்தான்களைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

ஆதாரம் : புஹாரி : 142, முஸ்லிம் : 375 (இவ்வார்தை புஹாரியில் இருந்து)

(இந்நபிமொழியின் அறிவிப்பாளர் பற்றி 2ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.)



ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:



  1.  குறிப்பிட்ட இடங்கள் மற்றும் நேரங்களுக்கென்று (ஆதார அடிப்படையில்) வந்திருக்கும் பிரார்த்தனைகளை ஓதுவது மனிதனை அல்லாஹ்வின் உத்தரவின் பிரகாரம் அனைத்துக் கெடுதிகளிலிருந்தும் பாதுகாக்கும்.
  2. கட்டிடங்களிலும், வெட்டவெளியிலும் இந்த துஆவை ஓதுவதும், மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை மனித ஜின்களின் பார்வைகளை விட்டும் மறைப்பதும் மலசலம் கழிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களிலுள்ளதாகும்.
  3.  நபிமொழியில் இடம்பெற்றுள்ள 'குபுஸ்' என்ற வார்த்தை 'கபீஸ்' என்பதன் பன்மையாகும். அதே போன்று 'கபாஇஸ்' என்ற வார்த்தை 'கபீஸத்' என்பதன் பன்மையாகும். இதன்மூலம் நாடப்படுவது ஆண், பெண் ஷைதான்களாகும். மேலும் 'குபுஸ்' என்றால் ஷைதான்கள், 'கபாஇஸ்' என்றால் பாவங்கள் என்றும் ஒரு கருத்து (அறிஞர் மத்தியில்) உள்ளது.



ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA 
 
 
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பெண்களின் நிலை.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பெண்களின் நிலை.


அநீதத்திற்கும், அட்டூழியங்களுக்கும் ஆளான பெண்களைப் பாதுகாத்து, அவர்களை விட்டும் வன்கொடுமைகளை நீக்கிட அந்நேரம் புது வித தோற்றத்தில் இஸ்லாமிய மார்க்கம் உருப்பெற்றது. ஆண், பெண் என இருபாலாருக்கும் மத்தியில் நீதத்தை அது கடைபிடித்தது. பெண்களுக்கு தடுக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகளை மீட்டுக்கொடுத்தது. கௌரவமற்றவர்களாக வாழ்ந்து வந்தவர்களை கௌரவனமானவர்களாய் மாற்றியது. அவர்கள் அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழ்ந்திட சிறந்த சட்ட திட்டங்களை வகுத்தது. அவைகளில் சில வருமாறு:

01. மனிதன் என்ற வகையில் பெண்கள் ஆண்களைப் போலவே எவ்வித மாறுபாடுகளும் இன்றி பூரணமாக படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அல்லாஹ்விடத்தில் நன்மைகளைப் பெறுவதிலும், தண்டனைகளைப் பெறுவதிலும் சமமானவர்கள். குலம், கோத்திரம், ஊர், நாடு, தொழில் போன்றவற்றை வைத்து இருவரில் ஒருவரையொருவர் மிகைத்திட முடியாது. ஏனெனில் அல்லாஹ் இயல்பாகவே அவ்வாறு தான் இருசாராரரையும் சமமாக படைத்துள்ளான். இதில் ஆண்கள் தலையிட்டு தாமே உயர்ந்தவர்கள் என கருத்துக்கள் கூறுவதற்கு எவ்வித இடமும் கிடையாது. அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.” (அல்குர்ஆன் 04:01).

02. ஏனைய மதங்களிலுள்ள மதப்போதகர்கள் கூறிவருவதைப் போல் பெண் என்பவள் சாபத்திற்குரியவள் அல்ல என்பதை இஸ்லாம் தெளிவாகவே குறிப்பிடுகிறது. ஆதம்  அவர்கள் தடுக்கப்பட்ட மரத்தின் பழத்தை உண்டு, சுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர் அவரது மனைவி ஹவ்வா  எனக் கூறி பெண்களை அவர்கள் சபித்து வருகின்றனர். இது ஹவ்வா  அவர்களிடம் மாத்திரம் ஏற்பட்ட தவறு கிடையாது. மாறாக இருவரிடத்திலுமே ஏற்பட்ட தவறு. இருவரும் ஷைத்தான் சொல்வதைக் கேட்டதாலே சுவனத்திலுருந்து வெளியேற்றப்பட்டனர். அல்லாஹ் கூறுகிறான், “அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.” (அல்குர்ஆன் 02:36). இன்னும் சில அல்குர்ஆன் வசனங்களின் படி தவறு ஆதம்  அவர்களிடமே ஏற்பட்டது என்பதைக் காண முடிகிறது. அல்லாஹ் கூறுகிறான், “ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.” (அல்குர்ஆன் 20:121). இன்னும் சில வசனங்கள் மனித குலத்தின் தாய் செய்த குற்றத்திற்கும், அவர்களை அடுத்து வந்த பெண்களுக்கும் எவ்வித சம்பதமும் கிடையாது எனக் குறிப்பிடுகின்றன. அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்” (அல்குஆன் 02:134).

03. பெண்களும் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு தகுதியானவர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றி, அவர்களின் முடிவு நல்லதாய் அமைந்தால் அவர்களும் சுனவத்தில் நுழைவார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்தால் ஆண்களைப் போலவே நரகிலும் நுழைவார்கள். இதில் இருதரப்பினருமே சமமானவர்கள். அல்லாஹ் கூறுகிறான், “ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.” (அல்குர்ஆன் 16:97).

04. பெண்களின் பிறப்பு பாதுகாப்பானது. முன் சென்ற சமூகங்களைப் போல் அவர்கள் உயிருடன் புதைக்கப்படவோ, கொல்லப்படவோ மாட்டார்கள். அவர்களின் வளர்ச்சிக் கட்டங்களில் பல பெயர்களை அவர்கள் பெறுவார்கள். அவர்கள் பெயர்கள் பெறும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு கௌரவிக்கப்படும் பெண்களை உயிருடன் புதைப்பதையோ, கருவில் இருக்கும் போதே கொல்வதையோ இஸ்லாம் தடைசெய்கிறது. அல்லாஹ் கூறுகிறான், “அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.” (அல்குர்ஆன் 06:140). மறுமை நாளின் மிக முக்கிய விசாரணைகளில் ஒன்றாக இதுவும் இடம் பெறும். அல்லாஹ் கூறுகிறான், “என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது,” (அல்குர்ஆன் 81:08-09).

05. பெண்களின் வளர்ச்சிக் கட்டங்களில் அவர்கள் பெறும் பெயர்களும், அவற்றுக்கான கண்ணியமும்:

அ. மகள்: நபி  அவர்கள் கூறினார்கள், “யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து, அவர்களை திருமணம் செய்து கொடுக்கிறாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவுத் 5148). இந்த ஹதீஸை இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹஸன் எனும் சட்டத்தைப் பெறும் ஹதீஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். (அல்ஜாமிஉஸ் ஸகீர் 8828).

ஆ. மனைவி: அல்லாஹ் கூறுகிறான், “நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 30:21), மேலும் நபி  அவர்கள் கூறினார்கள், “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிமாருக்கு சிறந்தவராக இருப்பவரே” (ஆதாரம்: திர்மிதி 1126).

இ. தாய்: அல்லாஹ் கூறுகிறான், “தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.” (அல்குர்ஆன் 46:15). மேலும் நபி  அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (ஆதாரம்: புஹாரி 5971).

ஈ. சகோதரி: நபி  அவர்கள் கூறினார்கள், “யார் இரண்டு அல்லது மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அல்லது இரண்டு அல்லது மூன்று சகோதரிகளை உறவாக பெற்று, அவர்களுடன் வாழ்கிறாரோ அல்லது அவர்களை விட்டும் மரணித்திருக்கிறாரோ நானும் அவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம். -இவ்வாறு கூறி தன ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள்-” (ஆதாரம்: இப்னுஹிப்பான் 447).

06. பெண்கள் கல்வி பயில வேண்டுமென்பதில் இஸ்லாம் அதிக ஆர்வம் காட்டுகிறது. தமது மனைவி, பிள்ளைகளுக்கும், தம்மிடம் இருக்கும் அடிமைப் பெண்களுக்கும் கல்வியைக் கற்றுக்கொடுக்குமாறு நபி  அவர்கள் தனது தோழர்களுக்கு ஏவியுள்ளார்கள். அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறும் கட்டளையிட்டுள்ளார்கள். நபி  அவர்கள் கூறினார்கள், “ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்லி கற்பித்து, அதையும் ஆழகுறக் கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நவீனமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்தால் அவருக்கு (விடுதலை செய்தது மற்றும் மணந்ததற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.” (ஆதாரம்: புஹாரி 5083).

07. மகள், மனைவி, தாய், சகோதரி, பாட்டி போன்ற பெண்ணின் அனைத்துக் கட்டங்களிலும் அவளுக்குரிய அனந்தரச் சொத்துக்களை முறைப்படி கொடுக்குமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது.

08. இஸ்லாம் பொருளாதாரத்தில் மனைவிக்கென சில சட்டங்களை வகுத்துள்ளது. மனைவி தன்னிடமுள்ள சொத்து செல்வங்களை சுதந்திரமாக கையாள முடியும். தனக்கான சிவில் உரிமைகளை முழுமையாகப் பெற்றிட முடியும். மனைவியின் அனுமதியின்றி அவளின் சொத்துக்களை கனவன் அனுபவிப்பதை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது.

09. முன் சென்ற சமூகங்களில் இடம்பெற்றதைப் போல் அல்லாமல் விவாகரத்துக்கென தனியான சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது. அதன் மூலம் பெண்கள் அநீதத்தில் வீழ்வதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கிறது. அவ்வாறே ஆண்களுக்கு நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் முடிக்க முடியாது எனும் சட்டத்தை அமுல்படுத்தி, பெண்கள் முன்னைய சமூகங்களில் உதாசீனம் செய்யப்பட்டதைத் தடுக்கிறது.

10. பருவ வயதை அடைவதற்கு முன்பாக பெண்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் அவர்களின் பொறுப்பாளர்களை பாதுகாவலர்களாக இஸ்லாம் ஆக்குகிறது. அவர்கள் இப் பெண்களை பாதுகாத்து, சிறந்த ஒழுக்க விழுமியங்களைப் போதித்து, அவர்களின் சொத்துக்களையும் பாதுகாத்திட வேண்டும். பருவ வயதை அடைந்த பிறகு ஆண்களைப் போல் தமது சொத்துக்களை சுதந்திரமாக அனுபவிக்கும் உரிமைகளை அப் பெண்கள் பெறுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் சுருக்கமாக நோக்கும் போது, பெண்கள் விடயத்தில் இஸ்லாம் மூன்று துறைகளில் கவனம் செலுத்துவதைக் காண முடிகிறது.

அ. மனிதம்: இது முன்சென்ற சமூகங்களில் பெண்களிடம் இல்லாத ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது. அதை இஸ்லாம் மாற்றியமைத்து, ஆண்களுக்கு உள்ளது போன்ற மனிதம் பெண்களிடமும் காணப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆ. சமூகவியல்: சமூக அந்தஸ்து குறைந்தவளாக நடாத்தப்பட்டு வந்த பெண்கள் இஸ்லாத்தில் சிறந்த சமூக விற்பன்னர்களாய் திகழ வாய்ப்புக்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவர்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, சமூகத்தை உருவாக்குவதில் பங்காற்றும் உரிமை போன்றவற்றை வழங்கியுள்ளது. குழந்தைப் பருவத்தில் அன்பு செலுத்தப்படுபவள். மனைவியான பிறகு அன்புடன் கூடிய பொறுப்புக்களைப் பெற்றவள். தாயான பிறகு அன்பும், அரவணைப்பும், சமூக பொறுப்பும் கொண்டவள். வயதாகிவிட்டால் திரும்பவும் அன்பு செலுத்துப்படுபவள் எனும் நிலைகளை கௌரவமாக கடந்து செல்வதற்கு இஸ்லாம் அழகிய வழிகாட்டல்களை அவர்களுக்காக உருவாக்கியுள்ளது.

இ. உரிமைகள்: பருவ வயதை அடைந்ததிலிருந்து தனக்குள்ள சொத்து செல்வங்களில் சுதந்திரமாக செயற்படும் அனைத்து உரிமைகளையும் இவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. இவ் வயதிற்குப் பிறகு ஏனைய முன் சென்ற சமூகங்களில் இருந்ததைப் போல், அல்லது இருப்பதைப் போல் தந்தை, கனவன், குடும்பத் தலைவன் போன்றோர் இவளின் சொத்துக்களில் தலையிடவோ, சொத்துக்களை மட்டுப்படுத்திடவோ, அல்லது அவை அனைத்தையும் ஆக்கிரமித்திடவோ எவ்வகையிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இம் மூன்றாம் வகையே எமது ஆய்வின் தலைப்பாக இங்கு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



عَنْ أَبيْ هُرَيْرَةَ  أَنَّ رَسُوْلُ اللهِ قَالَ:  'كُلُّ أُمَّتِيْ يَدْخُلُوْنَ الْجَنَّةَ إِلاَّ مَنْ أَبَى'. قالوا: يَا رَسُوْلَ اللهِ! وَمَنْ يَأْبَى؟ قَالَ: 'مَنْ أَطَاعَنِيْ دَخَلَ الْجَنَّةَ, وَمَنْ عَصَانِيْ؛ فَقَدْ أَبَى'. صحيح البخاري رقم الحديث 7280

(16) (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி).

ஆதாரம் : புஹாரி : 7280

(13 முதல் 16 வரையிலான நபிமொழிகளின் அறிவிப்பாளர் பற்றி 3ம் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
(1) மனிதனின் (ஈருலக) வெற்றி நபி (ஸல்) அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பதில் தான் இருக்கிறது.

(2) நபியவர்களின் வழிமுறையை (ப் பின்பற்றாமல்) தவிரந்து நடப்பது அவர்களுக்கு மாறுசெய்வதாகும். அவர்களுக்கு மாறு செய்வது நரகம் புக வழி வகுக்கும்.

(3) சுவனம் நுழைய யார் விரும்புகிறாரோ அவர் நபியவர்களைப் பின்பற்றுவது கடமையாகும்.



ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA


இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் பெண்களின் பொருளாதார நிலை.

வரலாறு நெடுகிலும் பெண்கள் மோசமான முறையிலே நடாத்தப்பட்டு வந்துள்ளனர். பெண்கள் என்றால் இவ்வாறு தான் வாழ வேண்டுமோ எனும் சோகமும், சோதனையுமே அவர்களின் வாழ்வில் பிரதிபலித்து வந்துள்ளது. தாம் ஒடுக்கப்பட்ட சமூகமாகவும், இறைவனால் படைக்கப்பட்ட இழி பிறவிகள் எனும் பெயருடனும், என்றுமே ஆண்களுக்கு சேவகம் செய்யும் வேலையாட்களாகவும், அவர்கள் எவ்வித தேவைகளும், ஆசாபாசங்களும் அற்ற ஜடங்கள் எனவுமே கடந்து வந்த ஒவ்வொரு நாகரீகத்திலும் பார்க்கப்பட்டுள்ளனர்.

அக்காலங்களில் பெண்கள் பார்க்கப்பட்ட விதமே வேறாக இருந்தது. பெண்கள் என்றாலே அவர்கள் சகுனம் சரியில்லாதவர்களாக பார்க்கப்பட்டுள்ளனர். இதற்காகவே அவர்கள் பல வரையறைகள் போடப்பட்டு, பிறருக்கு தீங்கு ஏற்படும் என பக்குவப்படுத்தப்பட்டு, வீட்டில் அடைக்கப்பட்டு வந்துள்ளனர். அதுவே காலப்போக்கில் அவர்களுக்கான சாபமாகவும் அமைந்துவிட்டது.

கிரேக்க நாகரிகத்தில் பெண்களின் நிலை

இன்றைக்கு எமது நாட்டு பாடப் புத்தகங்களிலும், ஏன் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களிலும் கூட கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப்படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியது என்றும், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது எனவும், இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

கிரேக்கப் பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை. சிறந்த நாகரீகத்தில் வாழும் நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர்.

அவர்களின் கலாச்சார விழுமியங்களில் பெண்கள் ஷைத்தானை விடவும் அருவருக்கத்தக்க கீழ்த்தரமானவர்களாகவே பார்க்கப்பட்டனர். சட்ட அடிப்படையில் அவர்கள் வியாபாரப் பொருட்களாக நடாத்தப்பட்டனர். சிவில் உரிமைகளுக்கு உண்டான எந்த ஒன்றையும் பெண்கள் விடயத்தில் நோக்காது, அவர்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்பட்டிருந்தனர். அனந்தரச் சொத்துக்களில் எந்த ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

திருமணம் முடிக்கும் போது கூட பெண்களின் சம்மதமில்லாமல் பெற்றோர் விரும்பும் ஆணுக்கே முடித்து வைக்கப்பட்டனர். திருமணம் முடித்த பின்னரும் காலம் பூராகவும் கணவனின் ஆதிக்கத்திற்குட்பட்டு வாழும் பெண்ணாகவே அவள் வாழ வேண்டியிருந்தது. கணவனின் அனுமதியின்றி தனது சொத்தில் எந்த ஒன்றையும் அசைக்க முடியாத நிலை அவளுக்கு இருந்தது. கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கும் உரிமை கூட இவளுக்கு இருக்கவில்லை. அதற்கும் பல தடைகளை இட்டு விவாகரத்து என்பதை விட ஆயுள் பூராகவும் கணவனுடனே வாழ்ந்திடலாம் எனும் அளவுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

சீதனம் கொடுக்கும் மரபு அவர்களிடம் பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து நிர்ப்பந்தமாக மணம் முடித்து வைப்பார்கள்.

பெண்களின் பேச்சைக் கேட்டு செய்யும் அனைத்துக் காரியங்களும் சட்டபூர்வமாக ரத்து செய்யப்பட்டன. கணவன் மரணித்தால் அவனது சொத்தில் எந்தப் பங்கும் மனைவி பெறமாட்டாள் எனும் சட்டம் நடைமுறையில் இருந்தது. தான் விரும்பிய நேரத்தில் தாயிடமிருந்து குழந்தைகளை தூரப்படுத்தி வைக்கும் அபூர்வ சட்டம் அவர்களிடம் இருந்தது. அந்நேரத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் தாய்க்கு அவர்களை அரவணைக்க முடியாது. தன் கண்முன்னே பிள்ளைகள் கஷ்டப்படுவதையும், மரணிப்பதையும் அவர்கள் கண்ணுர வேண்டியிருந்தது.

பெண்களும், அடிமைகளும் ஆண்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் என்றே கிரேக்க நாகரீக ஆண்கள் வர்க்கம் தமது நாகரீகத்தை வளர்த்து வந்துள்ளது.

உரோம நாகரிகத்தில் பெண்களின் நிலை

ரோமானியர்களும் கிரேக்க நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டவர்களே. பெண்கள் விடயத்தில் கிரேக்கர்கள் கடைபிடித்த அதே அணுகுமுறைகளைத் தான் இவர்களும் கடைபிடித்து வந்தனர். ஆனால் இவர்களின் மத அணுஷ்டானங்கள் கிரேக்கர்களை விட சற்று வித்தியாசமாக இருந்தது. மத அணுஷ்டானங்களை பின்பற்றுகிறோம் எனும் நோக்கில் பெண்களை அலட்சியப்படுத்தி வந்தனர்.

குடும்பத்தில் பெண் என்பவள் ஆண்களை விட தரம் குறைந்தவள். ஆகையால் குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புக்களும் ஆண்கள் கைவசமே இருந்தது. குடும்பத்தை பராமரித்தல், குடும்பத்தின் பொருளாதார விடயங்களைக் கவனித்தல், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற அனைத்திலும் ஆணாதிக்கமே மேலோங்கியிருந்தது. பெண் என்பவள் குடும்ப விவகாரங்களில் கைபொம்மையாகவே செயற்பட்டு வந்தாள். பெண்பிள்ளைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் அவள் சம்பாதிக்கும் பணத்தை செலவளிக்கும் விடயத்தில் அவளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. குடும்பத் தலைவரிடமே அப்பணங்கள் அனைத்தையும் சம்பாதித்துக்கொடுக்க வேண்டும் எனும் நிலையே அவர்களிடம் காணப்பட்டது. பெண் பிள்ளை திருமணம் முடித்துச் செல்லும் போது அவளுக்காக அவள் சேர்த்து தந்தையிடம் கொடுத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தந்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள இரண்டு பகுதிகளையும் இவளின் சொத்தாக மணமகனுக்கு கொடுத்து விடுவார். இந் நேரத்திலும் தனது சொத்தை கையாழும் உரிமை இவளுக்கு இருக்கவில்லை.

ஒரு பெண் திருமணம் முடித்துச் சென்றுவிட்டால் அவளின் குடும்பத்துடனான தொடர்பு அத்துடனேயே முறிந்து விடும். கணவன் வீட்டிற்குச் சென்றவுடன் அங்கு அவள் மனைவி போல் அல்லாமல் மகள் போல் நடாத்தப்படுவாள். அவளிடம் ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தால் அதற்கான தீர்வு வழங்கும் பொறுப்பு கணவனையே சார்ந்து இருந்தது. நீதிமன்றம் செல்லும் வழமை அவர்களிடம் காணப்படவில்லை. கணவன் மரணித்தால் மனைவி தனது ஆண்பிள்ளைகளின் பொறுப்பில் வந்து விடுவாள். அதன் பின்னர் தனது தாய் என்றும் பாராமல் விலைமாதுவாக அவளை நடாத்துவார்கள். இச்சமூகத்தில் பெண்கள் ஓர் விலைப் பொருளாகவே நோக்கப்பட்டனர்.

கணவனினதோ பிள்ளைகளினதோ அனந்தரச் சொத்துக்களை பெறும் உரிமை கூட ஒரு பெண்ணுக்கு இருக்கவில்லை. ஆண்கள் தனது நண்பர்களுக்கு பரிசளிக்கும் போது எதுவும் கிடைக்காவிட்டால் தனது மனைவியை அவர்களுக்கு பரிசளித்து விடுவார்கள். பெண் என்பவள் ஜடப்பொருளாக பார்க்கப்பட்டாள். அவள் இறைச்சி சாப்பிடக் கூடாது, சிரிக்கக் கூடாது, பேசக் கூடாது, எப்போதும் ஆண்களின் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு, அவர்களுக்கு பணிவிடை செய்துகொண்டே இருக்க வேண்டுமென ஓர் சட்ட விதி உரோம நாகரிகத்தில் காணப்பட்டது.



இந்து நாகரிகத்தில் பெண்களின் நிலை

இந்து மத வேதங்களின்படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன.

கணவன் மரணித்தாலும், எதிரிகள் தம்மை அட்டூழியம் செய்ய வந்தாலும் தீயில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென வேதங்கள் கூறுகின்றன. மழை பெய்ய வேண்டுமென்பதற்காகவும், உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் கடவுளுக்காக பெண்களை அறுத்துப் பலியிடும் வழக்கம் இந்து மதத்தில் இருந்து வந்துள்ளது.

பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகளை எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் இல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.

பெண் என்பவள் நீதியைக் கூட தனது அழகாலும், ஆபாசத்தாலும் மாற்றிட முடியும் என்பதற்காக அவள் எப்போதும் தந்தை, அல்லது கணவன், அல்லது மகன் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். தன் கணவனுக்கு முன் தலைகுணிந்து, அச்சம் கலந்த தொனியில் அவருடன் பேச வேண்டும். அவரை அழைக்கும் போதுகூட பெயர் கூறி அழைக்காமல், எஜமானே, பெரியவரே, கடவுளே என்றே அழைக்க வேண்டும். கணவனுடன் அமர்ந்து சாப்பிடக்கூடாது. கணவன் சாப்பிட்டு மீதம் வைப்பவற்றையே தான் சாப்பிட வேண்டும்.

கன்யாதானத்தின் போது, மணப்பென்னின் தந்தை மணமகளுடன் நகைகளையும், ஆடைகளையும் இன்னும் பிற பொருட்களுடன் மணமகன் வீட்டுக்கு அனுப்புவது மரபாகும். பெண்ணாய்ப் பிறப்பதே பெரும்பாவம் என ஒரு பக்கம் போதிக்கப்பட்டாலும், மீறிப் பிறந்தாலும் அவர்களின் மீதான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதை ஆரிய இந்து மதம் நியாயப்படுத்துகிறது.

அவ்வாறே உடைமைகளை சொந்தமாக்கிக் கொள்வதில் பெண், அடிமையைப் போல் நடாத்தப்பட்டாள். மனைவி, மகன், அடிமை ஆகிய மூவருக்கும் எச்சந்தரப்பத்திலும் ஒன்றையும் உடைமையாக வைத்திருப்பது கூடாது என இந்து மதம் போதித்துள்ளது. இவர்கள் சொத்தாக எதையும் சம்பாதித்து விட்டால் அதன் உரிமம் குடும்பத் தலைவருக்கே போய்ச் சேரும். ஆனாலும் சில சலுகைகளின் அடிப்படையில் அரசனின் தாய்க்கு அரசனின் மகன் பருவ வயதை அடையும் வரை நாட்டைப் பாதுகாக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறே மனைவிக்கு தனக்கு திருமணத்தின் போது கிடைக்கும் பரிசுப்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

யூதர்களிடம் பெண்களின் நிலை

யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர். இச்சிந்தனைக்கு பைபிள்தான் காரணம். பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், வீட்டையும் பாத்திரங்களையும் அவள் தொட்டால் அசுத்தமாகி விடும் என்று கருதி ஒதுக்கி வைத்தனர்.

யூத மதம் மிகவும் மோசமாகப் பெண்னை நோக்குகிறது. அவளுக்கான சிவில் உரிமைகளை மொத்தமாகவே பரித்துக்கொள்கிறது. திருமணத்திற்கு முன் தந்தையிடமும், திருமணத்தின் பின் கணவனிடமும் அடிமைப்பட்டு வாழவேண்டும் என்கிறது. இம் மதத்தின் அடிப்படையில் தந்தைக்கு தனது மகளை அடிமை எனும் நிலையில் வைத்து கணவனுக்கு விற்க முடியும். கணவனும் தான் கொடுக்க வேண்டிய மஹ்ரை வாங்கும் பணமாக பெண்ணின் தந்தைக்குக் கொடுத்து அவளை வாங்கிட முடியும். இங்கு மஹ்ர் என்பது பெண்ணை அடிமையாக வாங்குவதற்கு கொடுக்கப்படும் விலையாக கருதப்பட்டது. திருமண ஒப்பந்தம் நடைபெறாமல் அடிமை வியாபார ஒப்பந்தமே திருமணம் எனும் பெயரில் நடந்து வந்துள்ளது.

கணவன் மரணித்து விட்டால் அனந்தரம் பெறுபவர்களில் ஒருவர், இறந்தவரின் அனந்தரச் சொத்தாக மனைவியைப் பெற்றிடுவார். அவளுக்கென்று கணவனின் சொத்துக்களிலிருந்து ஏதும் கிடைக்காது. மகன்களின் சொத்துக்களில் எந்த ஒன்றும் அவர்களின் மரணத்தின் பின் தாய்க்கு போய்ச் சேராது. சம நிலையில் அனந்தரச் சொத்தைப் பெறுவதற்கு ஆண்களும் பெண்களும் இருந்தால் குறித்த பெண்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. அப்படித்தான் ஒரு பெண் அனந்தரச் சொத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் அவளின் தந்தைக்கு எந்த ஆண்வாரிசும் இருக்கக் கூடாது எனவும், அவள் தனது குடும்பத்தில் ஒரு ஆணை கட்டாயத் திருமணம் செய்திட வேண்டுமெனவும் நிபந்தனை இடப்பட்டிருந்தாள்.

கிறிஸ்தவர்களிடம் பெண்களின் நிலை

கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் 'ஏஜண்ட' எனக் கருதினர். பெண் மனித இனத்தைச் சேராதவள், அவளைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதக் கூடாது. அவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதக்கூடாது. அவள் ஷைத்தானின் உருவம். அவளின் சப்தம் பாம்பின் சப்தத்திற்கு ஒப்பானது என்று பெண்ணை ஒதுக்கிவைத்தனர்.

5ம் நூற்றாண்டில் பெண் என்பவள் உயிரற்ற ஜடமா? அல்லது உயிருள்ள பிரவியா? என்பதை ஆய்வு செய்ய ஓர் மாநாட்டை ஏற்பாடு செய்தனர். 6ம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டவர்கள் ஓர் மாநாட்டைக் கூட்டி பெண்ணை மனித இனத்தில் சேர்க்கலாமா என கலந்தாலோசனை செய்தனர். அதன் முடிவில் பெண் என்பவள் மனித இனத்தில் அடங்குவாள், எனினும் அவள் ஓர் இழி பிறவி. ஆண்களுக்கு சேவகம் செய்வதற்கே அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என முடிவெடுத்தனர். 17ம் நூற்றாண்டில் பெண்ணுக்கு உயிர் கிடையாது என ரோம் சாம்ராஜ்ஜிய ஆண்கள் முடிவெடுத்தனர். 11ம் நூற்றாண்டில் கணவன் தனது மனைவியை இன்னொரு ஆணுக்கு அவர் விரும்பும் காலஅளவுக்கு இரவலாக வழங்க முடியும் என திருச்சபை சட்டமியற்றியிருந்தது. அதன் படி விவசாயியின் மனைவி ஆட்சியாளர்களுக்கு 24 மணித்தியாளத்திற்கு இரவலாக வழங்கப்பட்டு வந்தாள். 1075ம் ஆண்டு கணவன், தனது மனைவியை இன்னொருவருக்கு விற்கலாம் என ஆங்கிலேயர்கள் சட்டமியற்றியிருந்தனர். மேலும், மனைவியின் விலையை 6 பென்ஷி, அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள். பெண்ணடிமைத்தனம் உலகம் முழுதும் இவ்வாறு கோலோச்சிக் கொண்டிருந்தது. 1500ம் ஆண்டு பிரித்தானியாவில் பெண்களுக்கு தண்டனை வழங்குவது எப்படி என்பதற்காக ஓர் மாநாட்டைக் கூட்டினர். அதன் முடிவில் பெண்களை உயிருடன் எரிப்பதே உச்ச தண்டனையாக பிரகடனப்படுத்தினர்.

இப்படியெல்லாம் பெண்களை ஆய்வுக்குட்படுத்தி அவர்களை சொத்துக்களுக்கு எவ்வகையிலும் சொந்தம் கொண்டாட விடாமலும், அவர்கள் இன்னொரு ஆணின் சொத்து என்பதனால் ஆணாதிக்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக அவர்களை ஆக்கிடவுமே கிறிஸ்தவ உலகு முயற்சித்தது.

1804ல் பிரெஞ்சு நாட்டில் சிவில் உரிமைகள் பற்றிய சட்டம் இயற்றப்பட்டது. அதில் 204ம் சரத்தின் படி திருமணமான பெண் தனது சொத்தில் ஒரு பகுதியை கணவனுக்கு கட்டாயம் வழங்கவேண்டுமென இருந்தது. மேலும், தான் வைத்திருக்கும் எஞ்சிய சொத்தில் தான் விரும்பிய பிரகாரம் தானம் செய்வதற்கோ, அதை இன்னொருவருக்கு மாற்றிடவோ, அடகு வைக்கவோ முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றை செய்யவேண்டுமாக இருந்தால் கணவனின் கடிதமும், அவரின் கையெழுத்தும் வேண்டுமென நிபந்தனையிட்டிருந்தது. அவள் தொழில் புரியும் பெண்ணாக இருப்பின் தான் சம்பாதிக்கும் அனைத்துப் பணமும் கணவனுக்கே வழங்க வேண்டும். திருமணம் முடிக்காத பெண்ணாக இருந்தால் எந்தத் தொழிலிலிருந்தும் தனக்கு பொறுப்பானவரின் விருப்பமின்றி ஓய்வு பெறக்கூடாது எனவும் பிரெஞ்சு நாட்டு சட்டம் கூறியது.

19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை அவளுக்கு வழங்கப்படவில்லை.

அரேபியர்களிடத்தில் பெண்களின் நிலை


இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் அரேபியர்களுக்கென ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சி, சட்ட அதிகாரங்கள் போன்றன காணப்படவில்லை. அவர்களுக்கு மத்தியில் பல கோத்திரங்கள் காணப்பட்டதால் ஒவ்வொருவரும் தமது கோத்திரத்தின் சட்ட திட்டங்களையே பின்பற்றி வந்தனர். அதில் சில கோத்திரங்கள் தவறாக கருதக்கூடியவற்றை வேறு சில கோத்திரங்கள் நல்லதாகக் கருதிவந்தது. சில கோத்திரங்கள் பெண்களை கௌரவமாக நடாத்தி வந்தனர். இன்னும் சில கோத்திரங்கள் பெண்களை கீழ்த்தரமாக நடாத்தி வந்தனர்.

அரேபியர்களில் ஓர் ஆண் மரணித்தால் அவனுக்கு மனைவியும், குறித்த மனைவிக்கு பிறக்காத வேறு பிள்ளைகளும் இருப்பின் அப்பிள்ளைகளில் மூத்தவன் தனது தந்தையின் மனைவியை அனந்தரச் சொத்தாக திருமணம் செய்துகொள்வான். தான் அப்பெண்ணை திருமணம் செய்ய நினைத்தால் அவள் மீது ஓர் போர்வையைப் போர்த்தி, எனது தந்தையின் சொத்துக்களை நான் அனந்தரமாக பெறுவது போல் உன்னையும் அனந்தரமாக பெறுகிறேன் என சபையில் குறிப்பிட வேண்டும். தான் திருமணம் முடிக்கப் போகும் பெண்ணுக்கு மஹ்ர் ஏதும் ஆண் கொடுக்க மாட்டார். ஓர் பெண்ணை இன்னொருவருக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் அதில் கிடைக்கும் மஹ்ரை இவர் பெற்றுக்கொள்வார். சில போது பெண்களை திருமணம் செய்து கொள்ளாமலும், இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்காமலும் வப்பாட்டியாக வைத்துக்கொள்வார்கள். குறைஷிகள் மஹ்ர் விடயத்தில் சற்று வித்தியாசமாக செயற்பட்டனர். யார் குதிரை வீரராக இருந்து, அம்பு எய்தும் வீரராகவும், வாள்வீச்சு வீரராகவும் யுத்தகளத்தில் செயற்பட்டு, யுத்தப்பொருட்களை கைப்பற்றுகிறாரோ அவர் அனந்தரச் சொத்துக்களைப் பெறுவதற்கு தகுதியானவர் எனும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.

பல அரேபிய கோத்திரத்தவர்கள் தங்களின் பெண்களான தாய், மனைவி, மகள் போன்றோருக்கு எவ்வித அனந்தரச் சொத்தையும் வழங்க மாட்டார்கள். அவ்வாறே தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்ளும் உரிமை கூட அவர்களுக்கு இருக்கவில்லை. ஓர் ஆண் எத்தனைப் பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் முடித்திடலாம் எனும் வழக்கு அவர்களிடம் இருந்தது. இதன் போது பெண் விவாகரத்து சொல்லப்பட்டால் அவளை திரும்பவும் அந்த ஆணிடம் அனுப்பாமல் இருக்கும் அதிகாரம் பெண்ணின் பொறுப்பாளருக்கு இருந்தது. ஒருவர் ஒரு பெண்ணை எத்தனை தடவை வேண்டுமானாலும் விவாகரத்து சொல்லிடலாம். அவ்வாறு விவாகரத்து சொல்லிவிட்டால் அவளை வேறு யாரும் மணந்துவிடக்கூடாது என்பதற்காக அவளின் இத்தா முடியும் முன்னரே மீட்டெடுத்து விடுவர்.

சில கோத்திரத்தினர் பெண்களை அபசகுணமாகக் கருதினர். பெண் பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் மூலம் தமக்கு பசி, பட்டினி, பஞ்சம், ஏழ்மை போன்றவை ஏற்படுமென நினைத்து அவர்களை உயிருடன் புதைத்து வந்தனர்.

இவ்வாறு அரேபியக் கோத்திரங்கள் பெண்களை கீழ்நிலையில் நடாத்தி வந்தாலும் சில கோத்திரங்களில் பெண்கள் நல்ல கௌரமாகவும், வளம் மிக்கவர்களாகவும் சமூகவியல், பொருளாதரம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களாகவும் இருந்துள்ளனர். அதுவும் பெரிய குடும்பத்துப் பெண்களுக்கும், வியாபாரத்தில் சிறந்து விளங்கும் கோத்திரத்தின் பெண்களுக்குமே இவ்வாறான சலுகைகள் கிடைக்கப்பெற்றன. அவர்களில் பருவமடைந்த பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடவும், தனது சொத்தை விரும்பியவாறு விரும்பியவர்களுக்கு தானம் செய்வதற்கும், வஸிய்யத்தாக வழங்குவதற்கும் தகுதியுடையவளாக இருந்தார்கள். இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் பெண்கள் வைத்தியம், அழகுக்கலை, மகப்பேறு பார்த்தல், பெண்களுக்கு விருத்த சேதனம் செய்தல், கால்நடைகளை மேய்தல் எனும் தொழில்களை சுதந்திரமாக செய்து வந்திருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகள் கோத்திரத்திற்கு கோத்திரம் வேறுபட்டதாக இருந்தது.

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget